பாஜக மீதான பல்க் எஸ்எம்எஸ் புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாஜக மீதான பல்க் எஸ்எம்எஸ் புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால், புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், வாக்காளர்களின் செல்போன் எண்களை ஆதார் மூலம் சட்டவிரோதமாக பெற்று பாஜகவினர் பிரசாரம் செய்வதாகவும், இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு ஒத்தி வைத்தனர். இதனையடுத்து, மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், எஸ்எம்எஸ் மூலம் பிரசாரம் மேற்கொள்ள பாஜக முன் அனுமதி பெறவில்லை. சைபர் குற்றப்பிரிவு போலீசின் விசாரணை அறிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், உரிய விசாரணையின்றி பாஜகவை நேரடியாக தகுதி நீக்கம் செய்ய முடியாது. நீதிமன்றம் வேண்டுமென்றால் விசாரணையை கண்காணிக்கலாம் எனவும் ஆணையம் கூறியிருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், பாஜக மீதான எஸ்எம்எஸ் பிரசாரம் குறித்த புகாரை விசாரித்து முடிக்கும்வரை புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது? என காட்டமாக கேள்வி எழுப்பினர். செல்போன் எண்கள் பாஜகவினருக்கு கிடைத்தது பற்றி ஆதார் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கு 31ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
