‘பப்ஜி’ மதனின் ஆபாச பேச்சுக்கள் அடங்கிய சிடி ஐகோர்ட்டில் தாக்கல்... முன் ஜாமீன் மனு தள்ளுபடி!
சென்னை உயர் நீதிமன்றத்தில் மதன் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மதன், டாக்ஸிக் மதன் 18 பிளஸ் ஆகிய யூடியூப் சேனல்களில் விளையாட்டின் டிப்ஸ், டிரிக்ஸ் சொல்லிக் கொடுப்பதாக கூறி சிறுவர், சிறுமிகளிடம் மிகவும் ஆபாசமாக பேசி வந்த மதன் என்ற நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் யூ-டியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதாக மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு, ஜூன் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் முன் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி தண்டபாணி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சக யூ-டியூப் போட்டியாளர்களால் அளித்த புகாரின் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், தான் பாதிக்கப்பட்டதாக எந்த தனி நபரும் இதுவரை புகார் அளிக்கவில்லை என வாதிட்டார்.
இதனைக் கேட்ட நீதிபதி மதன் பேசியுள்ள யூ-டியூப் வீடியோக்களை கேட்டுள்ளீர்களா? அதனை காது கொடுத்து கேட்க முடியவில்லை என பலரும் புகார் தெரிவித்துள்ளனர் எனக்கூறினார். மேலும் மதன் பேசிய யூ-டியூப் பதிவின் ஆடியோ நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைக் கேட்ட நீதிபதி, மதனின் பேச்சுக்கள் தொடக்கம் முதலே இவ்வளவு கேவலமாக இருக்கிறது. மதன் பேசியதைக் கேட்டுவிட்டு வந்து நாளை ஆஜராகுங்கள் என மதன் வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
மனைவி கைது செய்யப்பட்டதை அடுத்து பப்ஜி மதன் சரணடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தலைமறைவாக இருந்து போலீசுக்கு தண்ணி காட்டி வந்த மதனை தர்மபுரியில் பப்ஜி மதனை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மதன் தர்மபுரியில் கைதானதால் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க தேவை இல்லை என அவருடைய வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் காவல்துறை சார்பில் மதன் ஆபாச பேச்சுக்கள் அடங்கிய சிடியை தாக்கல் செய்ததோடு, கைது செய்யப்பட்டதையும் உறுதிபடுத்தினர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி மதன் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.