நாளை எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு நாளை விடுமுறை அறிவித்துள்ளது
![TN govt announced holiday for schools and colleges in chennai tomorrow smp TN govt announced holiday for schools and colleges in chennai tomorrow smp](https://static-ai.asianetnews.com/images/01djeqgnp0135nv69ay0bv2d61/school-08-08-19-jpg_363x203xt.jpg)
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத பெருமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக அதிகமான மழைப்பொழிவை சந்தித்தன. இதன் காரணமாக, இந்த 4 மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றிலிருநது பாதுகாக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்: ராஜ்நாத் சிங் உறுதி!
இந்த நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு நாளை விடுமுறை அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக, நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் நாளை (8.12.2023) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.