தமிழக அரசின் தவறான முடிவு... பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பதவிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு...!
ஆணையருக்கு பதிலாக கல்வித் துறையில் அனுபவம் பெற்றவர்களை இயக்குனராக நியமிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
பள்ளிக்கல்வி துறை இயக்குனரின் அதிகாரங்களை, ஆணையரிடம் ஒப்படைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.
அரியலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கருணாகரன் தாக்கல் செய்த மனுவில், பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் பெற்ற முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளிக்கல்வி துறை இணை இயக்குனராகவும், பின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டு வந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரியை அப்பதவியில் நியமித்து, பள்ளி நிர்வாகத்தை கண்காணிக்கப்பட்டது எனவும், ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை செயலாளர் உள்ள நிலையில், எந்த வித சிறப்பு தகுதியும், அனுபவமும் இல்லாத ஆணையர் பதவி என்பது தேவையில்லாதது எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பள்ளிக்கல்வி துறை இயக்குனரின் அதிகாரங்களை, ஆணையருக்கு வழங்கி கடந்த மே 14ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தவறு எனவும், ஆணையருக்கு பதிலாக கல்வித் துறையில் அனுபவம் பெற்றவர்களை இயக்குனராக நியமிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்று, விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.