திருவெல்லிக்கேணியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் ஒருவன் உடல் நலக்குறைவால் அவதிப்படவே பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் உச்சம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,108 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 7,435 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 2,599 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 71 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கி இருக்கிறது. தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வருவதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


தமிழகத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. அங்கு நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வரும் பாதிப்பு தற்போது 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,946 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இருக்கும் அனைத்து மண்டலங்களிலும் அசுர வேகத்தில் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் அதிர்ச்சி தரும் செய்தியாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள், மருத்துவ துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் போன்றோருக்கு கொரோனா தொற்று ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் திருவெல்லிக்கேணியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் ஒருவர் உடல் நலக்குறைவால் அவதிப்படவே பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சென்னையில் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கோடம்பாக்கத்தை சேர்ந்த 31 வயது ஆண் மருத்துவருக்கு அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதே போல சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது ஆண் மருத்துவர் மற்றும் கொரட்டூரை சேர்ந்த 45 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கும் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனைகள் நடந்து வருகிறது.