சாலையில் வாகன விபத்தை தடுக்கும் நோக்கில், சாலை போக்குவரத்து காவலர் ஒருவர், சென்னை மதுரவாயல் சாலையில் பூசணிக்காயை உடைத்து திருஷ்டி கழித்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உடைத்த பூசணிக்காயை அப்புறப்படுத்தாமல் அதே இடத்தில் விட்டுச் சென்ற காவலர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை மதுரவாயல் - ஶ்ரீபெரும்புதூர் சாலையில் கடந்த 6 ஆண்டுகளில் 120 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தை குறைப்பதற்காக அமைக்கப்பட்டு வரும் பூந்தமல்லி-ஶ்ரீபெரும்புதூர் வழித்தடத்தில் 23கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையை விரிவுபடுத்தும் பணியும் தாமதமடைந்து வருகிறது. இந்த 6 வழிச்சாலை கடந்த மே மாதமே மக்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டியது. ஆனால், பணி தாமதம் காரணமாக இன்னும் வரவில்லை.

இந்நிலையில், மதுரவாயல் போக்குவரத்து அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் பழனி, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படும் பகுதிகளை பட்டியலிட்டு, அப்பகுதியில் விபத்து நடக்கக்கூடாது என வேண்டி திருஷ்டி கழித்துள்ளார். இதற்காக, திருநங்கையை காவல் வாகனத்தில் அழைத்து வந்து சாலையின் நடுவே பூசணிக்காய் வைத்து பூஜை செய்து திருஷ்டி கழித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



ஆனால், உடைக்கப்பட்ட பூசணியை சாலையிலிருந்து அப்புறப்படுத்தாததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுவே வாகன விபத்திற்கும் காரணமாக அமைகிறது. ஏற்கனவே, விபத்து ஏற்படுவதாகக்கூறி, கடை திறப்பு, வாகன பூஜை போன்றவற்றிற்கெல்லாம் பூசணிக்காய் உடைக்கக்கூடாது என காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டு, அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர், கபில் குமார் சி சரத்கர் கூறுகையில், "ஒரு காவல்துறை அதிகாரி தனது தனிப்பட்ட நம்பிக்கையை மேற்கொண்டது துரதிஷ்டவசமானது. இது தவிர்க்கப்பட வேண்டிய செயல். சிறு அறியாமையில், அவர் தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நடத்தையை வேறுபடுத்திப் பார்க்கத் தவறிவிட்டார் என்றார். விபத்துகளுக்கு, அறிவியல் பகுப்பாய்வு மற்றும் விபத்துகளுக்கான காரண பரிகாரங்கள் பற்றிய ஆய்வை மட்டுமே இந்த காவல்துறை நம்புகிறது என்றார். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போக்குவரத்து காவலர் எஸ்ஐ பழனி. களப் பணியில் இருந்து விலக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.