வெளியில் சென்று வீடு திரும்பிய ரெஜினா சங்கீதா, தனது அறையில் சிசிடிவி கேமரா பொருத்துவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், என்னை வேவு பார்க்க கேமரா வைக்கிறீர்களா, என்னுடைய அனுமதியில்லாமல் எப்படி எனது அறையில் கேமரா பொருத்தலாம், என கேட்டு மாமியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

மருமகளை உளவு பார்க்க வீட்டின் அறையில் சிசிடிவி கேமரா பொருத்திய தகராறில், மாமியார் மூக்கை மருமகள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சென்னை கொளத்தூர் சோம்நாத்புரம் 4வது தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (69). இவரது மனைவி கேத்தரின். இவர்களது மூத்த மகன் அந்தோணி ஜூடோ டோம்னிக். இவருக்கு திருமணமாகி ரெஜினா சங்கீதா (38) என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். ஆரோக்கியராஜ் தனது மனைவியுடன் வீட்டின் மேல் தளத்திலும், அந்தோணி தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் தரை தளத்திலும் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், அந்தோணிக்கும், ரெஜினா சங்கீதாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனிடையே, ரெஜினாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால், அவரை கண்காணிக்க, அவரது அறையில் சிசிடிவி கேமரா பொருத்த மாமியார் கேத்தரின் முடிவு செய்துள்ளார். மேலும், இதுபற்றி மகன் அந்தோணியிடம் தெரிவித்தபோது, அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்று கேமரா வாங்கி வந்து, ரெஜினா சங்கீதா இல்லாத நேரம் பார்த்து, அவரது அறையில் மறைவான இடத்தில் பொருத்தும் பணியில் கணவர் அந்தோணி, மாமியார் கேத்தரின் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அப்போது, வெளியில் சென்று வீடு திரும்பிய ரெஜினா சங்கீதா, தனது அறையில் சிசிடிவி கேமரா பொருத்துவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், என்னை வேவு பார்க்க கேமரா வைக்கிறீர்களா, என்னுடைய அனுமதியில்லாமல் எப்படி எனது அறையில் கேமரா பொருத்தலாம், என கேட்டு மாமியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது, ஆத்திரமடைந்த ரெஜினா சங்கீதா, மாமியார் கேத்தரினாவின் முகத்தில் ஓங்கி குத்தியதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. பின்னர், இதுகுறித்து இருவரும் கொளத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.