2 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு குழந்தைகள் மையத்திலேயே ஆதார் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Aadhaar will be issued to Children's Care Centre: தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு, குழந்தைகள் மையத்தை நடத்தி வருகிறது. இந்த மையத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்கப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் ஆலோசனையும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை குழந்தைகள் மையத்தில் சேர்த்தால் குழந்தைகளுக்கு அந்த மையத்திலேயே ஆதார் அட்டையும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் குழந்தைகள் மையம்
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்ட அறிவிப்பில், ''ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியினை மேம்படுத்தும் பொருட்டு நமது மாவட்டத்தில் செயல்படும் 492 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகிறது.
2 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள்
குறிப்பாக 2 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகள் மையத்தில் முறைசாரா முன்பருவக் கல்வி செய்கைப் பாடல் கதை,விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத் திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஆதார் அட்டை
மேலும் குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிச் செல்ல ஆயத்தப் படுத்தப்படுகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது வீடுகள்தோறும் குழந்தைகள் சேர்கை பணி மேற்கொண்டு வருகிறார்கள். எனவே பெற்றோர்கள் தங்களது 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஜீன் 2025-ம் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாது சேர்த்திடவும், குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணியும் நடைப்பெற்று வருவதால், அச்சேவையையும் பயன்படுத்தி கொள்ளுங்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரும் அறிவிப்பு
இதேபோல் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாசும் பெற்றோர்கள் தங்களது 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஜீன் 2025ம் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சேர்த்திட வேண்டும் என்றும் அந்த மையங்களிலேயே குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.
