சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரண வழக்கில் திடீர் திருப்பம்... பகீர் கிளப்பும் புதிய தகவல்..!
ராம்குமார் உடலில் அப்படியேதும் ஏற்படவில்லை. அவரது திசுக்களை ஆராய்ந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவரது உடலில் இருந்த காயங்கள் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்டவை அல்ல என மருத்துவர் சையது கான் தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு பிறகு சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரண வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி ராம்குமார் உயிரிழக்கவில்லை என்று தடயவியல் நிபுணர்கள் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 2016ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம் பெண் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்போது தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றது. இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஜூலை 1ம் தேதி நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை கைது செய்தனர். கைது செய்தபோதே அவர் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொள்ள முயற்சித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இதனால் அவரது கழுத்தில் கட்டு போடப்பட்டது. மீடியாக்களிடம் அவரால் பேச முடியவில்லை.
இதனையடுத்து, போலீசார் தரப்பில் ராம்குமார் சுவாதியை ஒரு தலையாக காதலித்ததாகவும், அவர் காதலை மறுத்ததால் கொலை செய்ததாகவும் கூறினர். ஆனால் அது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் செப்டம்பர் 18ம் தேதி மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் அறிவித்தனர். சுவாதி கொலை வழக்கின் மர்மம் விலகாத நிலையில் ராம்குமாரின் தற்கொலை மேலும் சந்தேகங்களையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், 5 ஆண்டுகள் பிறகு ராம்குமார் மரணத்தில் என்ன நடந்தது என்பது பற்றி பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ராம்குமார் உடலை முழுமையாக பரிசோதனை செய்த மருத்துவர் வழங்கிய அறிக்கை தற்போது ஊடகம் ஒன்றின் வாயிலாக வெளியாகியுள்ளது. அதில், ராம்குமாரின் உடல் திசுக்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் அவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என ஹிஸ்டோபாதாலஜி (Histopathology) துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்பு ஆகஸ்ட் 18-ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அப்போது பேராசிரியர்களாக இருந்த மருத்துவர்கள் ஆண்டாள், வேணு ஆனந்த் ஆகியோர் 2016 அக்டோபர் 7-ம் தேதி ராம்குமாரின் உடலை ஆய்வு செய்தனர். அவரது மூளை, இதய திசுக்கள், நுரையீரல்கள், கல்லீரல், நாக்கு, உதடுகள், மண்ணீரல், சிறுநீரகங்கள் ஆகியவை நல்ல நிலையில் இருந்ததாக சான்றளித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கினால் உடலில் இருக்கும் திசுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா என மனுதாரர் தரப்பில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர்கள், பெரும்பாலும் மாற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால் ராம்குமார் உடலில் அப்படியேதும் ஏற்படவில்லை. அவரது திசுக்களை ஆராய்ந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவரது உடலில் இருந்த காயங்கள் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்டவை அல்ல என மருத்துவர் சையது கான் தெரிவித்துள்ளார்.