பொது அமைதியை பாதிக்கும் நோக்கில் செயல்படும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பொது அமைதியை பாதிக்கும் நோக்கில் செயல்படும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தில் வன்முறை, கலவரத்துக்கு சசிகலா, தினகரன் சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்று டிஜிபி திரிபாதியிடம் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் ஏற்கனவே மனு கொடுத்தனர். 

இந்நிலையில், இது குறித்து போலீஸ் தரப்பில் விடுத்துள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு காவல்துறையினர், பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநிலத்தில் வகுப்பு, சமய, அரசியல் ரீதியான பிரச்சனைகள் ஏதுமின்றி பொது அமைதியை நிலைநாட்டி சட்டம் - ஒழுங்கை பராமரித்து வருகின்றனர்.

சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக பிற அமைப்பினரைப் போல் தங்களைப் பாவித்துக் கொண்டு பெருந்திரளாகக் கூடி சட்டத்தை கையிலெடுத்து போக்குவரத்தையும், பொது அமைதியையும் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதுபோன்ற செயல்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதுடன், மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ இடையூறு விளைவிக்கும் என்பதால் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாமென தமிழக காவல் துறை கேட்டுக் கொள்கிறது. இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டபடி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது.