பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு... சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!
சிறப்பு டிஜிபி-க்கு எதிரான பாலியல் தொல்லை வழக்கு விசாரணையை ஆறு வாரத்திற்குள் முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு டிஜிபி-க்கு எதிரான பாலியல் தொல்லை வழக்கு விசாரணையை ஆறு வாரத்திற்குள் முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக தமிழக சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், இந்த வழக்கில் 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், இன்னும் 30 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய விசாகா குழு, தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து, முடிவுக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதி, இன்னும் விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். அப்போது விசாரணை அதிகாரி, சார்பில், 4 முதல் 8 வாரங்கள் ஆகும் என தெரிவித்தார்.
இதையடுத்து, சிறப்பு டிஜிபி-க்கு எதிரான வழக்கை ஆறு வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்... அரசின் அனுமதியைப் பெற்று, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணை ஜூன் மாதம் 18 ம் தேதி ஒத்திவைத்தார்.