"மகனைப் புதைக்க இடம் தாராத நீங்கள் எல்லாம் கிறிஸ்டியன் சொல்லாதீங்க".. ஒரே மகனை இழந்த தாயின் கதறல்.!
உடலை அவனுக்கு பிடித்தப்படி புதைக்கலாம் என்பதற்காக அருகிலுள்ள ஆர்.சி சபைக்கு போன் போட்டு கேட்டேன். அதற்கு நீங்கள் சந்தா கட்ட வேண்டும். அதனால் குழந்தையை புதைக்க இங்கே இடம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். இதையடுத்து, சிஎஸ்ஐ சபையிடம் அணுகியபோது, நீங்கள் சிஎஸ்ஐ என்பதை உறுதி செய்ய மதுரையில் இருந்து சான்றிதழ் வாங்கி வந்தால், புதைக்க இடம் தருகிறோம்.
ஒரு குழந்தையை புதைக்க இடம் கொடுக்க முடியாத நீங்கள் எல்லாம் எதற்கு கிறிஸ்டியன் என்று சொல்லவேண்டும் என்று பள்ளி பேருந்து மோதி உயிரிழந்த தீக்சித் தயார் கதறியபடி கூறியுள்ளார்.
பள்ளியில் விபத்து
சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெனிபர். இவரும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களின் மகன் தீக்சித்(7) என்பவர் வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை பள்ளி வளாகத்தில் பள்ளி வேன் மோதியதில் தீக்சித் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆறுதல் கூறிய அமைச்சர்
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி வேன் ஓட்டுநர், பள்ளி தாளாளர் ஜெய சுபாஷ், முதல்வர் தனலட்சுமி மற்றும் வேனில் இருந்து குழந்தைகளை இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே ஓட்டுநர் பூங்காவனம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பள்ளி ஊழியர் ஞானசக்தி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, குழந்தையை இழந்து தவிக்கும் அவருக்கு ஆறுதல் கூறிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். பள்ளியின் தாளாளரைக் கைது செய்யும் வரை, உயிரிழந்த மாணவர் தீக்சித் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் பெற்றோரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னரே, மாணவர் தீக்சித் உடலைப் பெற்றோர் வாங்கச் சம்மதம் தெரிவித்தனர்.
மகனைப் புதைக்க இடம் தரவில்லை
இதுகுறித்து மாணவனின் தாயார் ஜெனிபர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-“நான் கிறிஸ்டியன். எனது கணவர் இந்து. என் பையன் இரண்டு மதத்தையும் விரும்புவான். ஆனால் ஜீசஸை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால், உடலை அவனுக்கு பிடித்தப்படி புதைக்கலாம் என்பதற்காக அருகிலுள்ள ஆர்.சி சபைக்கு போன் போட்டு கேட்டேன். அதற்கு நீங்கள் சந்தா கட்ட வேண்டும். அதனால் குழந்தையை புதைக்க இங்கே இடம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். இதையடுத்து, சிஎஸ்ஐ சபையிடம் அணுகியபோது, நீங்கள் சிஎஸ்ஐ என்பதை உறுதி செய்ய மதுரையில் இருந்து சான்றிதழ் வாங்கி வந்தால், புதைக்க இடம் தருகிறோம் என்கின்றனர். இப்படி சொல்ல உங்களுக்கு எல்லாம் அசிங்கமா இல்லையா. நானும் கிறிஸ்டியன்தான், ஒரு குழந்தையை புதைக்க இடம் கொடுக்க முடியாத நீங்கள் எல்லாம் எதற்கு கிறிஸ்டியன் என்று சொல்லவேண்டும் என்று குழந்தையை இழந்த தாய் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.