சாலை ஆக்கிரமிப்பால் நடு ரோட்டில் நிறுத்தப்படும் பஸ்கள்… - மழை, வெயிலில் அவதிப்படும் பயணிகள்
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பால் நடு ரோட்டில் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் மழை, வெயிலில் அவதிப்பட்டு பயணம் செய்கின்றனர்.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பால் நடு ரோட்டில் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் மழை, வெயிலில் அவதிப்பட்டு பயணம் செய்கின்றனர்.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்தூரில் இருந்து அச்சிறுப்பாக்கம் வரை முக்கிய நகரங்கள் உள்ள பகுதிகளில் சாலையின் இருபுறமும், சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பயணிகளுக்கான பஸ் நிழற்குடையும் உள்ளது.
இதனை பயன்படுத்தி பயணிகள், பஸ் வரும் வரை நிழற்குடையில் காத்திருப்பார்கள். அவ்வழியாக வரும் பஸ்கள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று வருவார்கள்.
ஆனால் சிங்கபெருமாள், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள சர்வீஸ் சாலை முழுவதும் கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆக்கிரமித்துள்ளதால், அரசு மற்றும் தனியார் பஸ்கள், சர்வீஸ் சாலையில் சென்று பயணிகளை ஏற்றுவது இல்லை.
இதனால், தேசிய நெடுஞ்சாலையில் பஸ்கள் நிறுத்தப்படுவதால், பயணிகள் நிழற்குடையில் காத்திருக்காமல் கடும் வெயிலிலும், மழையிலும் காத்திருந்து, பஸ்சில் ஏறி பயணம் செய்கின்றனர். இதையொட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் படுகாயமடைந்துள்ளனர். சில உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன.
சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளூர் போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் செயல்படுவதாக சமூக ஆர்வலகர்கள் கூறுகின்றனர்.
எனவே, சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசு மற்றும் தனியார் பஸ்கள் அவ்வழியாக சென்று, பயணிகளை ஏற்றி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.