தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்களை பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி சரண்யா, விமல் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச இணையதளங்களை பார்க்க நேரிடுவதாகவும் மனுதாரர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர். இம்மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற பின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அப்போது ஆன்லைன் வகுப்புகளுக்கு நீதிபதிகள் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

அதேசமயம், ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் குறித்து பெற்றோர், ஆசிரியர் கலந்துரையாடல் நடத்த வேண்டும். மாவட்ட தலைமையகத்தில் ஆன்லைன் வகுப்புகளைக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்தனர்.