சென்னையை குளிர்விக்கும் மழை..! பொதுமக்கள் உற்சாகம்..!
சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த மாதம் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது. சில மாவட்டங்களில் கனமழையும் பெய்தது. பின் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட புயல்கள் நகர்ந்து சென்றதால் தமிழகத்தின் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு மழையின் அளவு வெகுவாக குறைந்தது.
புல்புல் புயல் கரையை கடந்த பிறகு தமிழகத்தில் மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வெப்பசலனம் மற்றும் வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்று இரவு சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. வேளச்சேரி, கிண்டி, திருவான்மியூர், மெரினா கடற்கரை, தேனாம்பேட்டை உட்பட பல இடங்களில் மழை பெய்தது. இன்று காலையில் இருந்தே சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. நகரின் சில பகுதிகளில் காலையில் லேசான மழை பெய்தது. மேலும் இரு தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.