சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இந்த நிலையில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

ஆந்திராவின் வடக்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி கர்நாடகாவை நோக்கி நகர்ந்து சென்றுள்ளதால் மழையின் அளவு இனி படிப்படியாக குறைய வாய்ப்பிருக்கிறது. 24 மணி நேரத்திற்கு பிறகு மழையின் தாக்கம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. வேளச்சேரி, கிண்டி, அண்ணாசாலை போன்ற பகுதிகளில் இரவு 10.30 மணியில் இருந்து மழை பெய்கிறது. இரவு நேரத்தில் குளிர்ச்சியான நிலையில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, வேலூர் மாவட்டம் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் 6 மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.