புரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..!
வங்கக் கடலில் உருவான புரெவி புயல் டிசம்பர் 4-ம் தேதி கன்னியாகுமரி பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது கன்னியாகுமரிக்கு கிழக்கே 1,150 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென் கிழேக்கே 975 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியது. அந்தப் புயலுக்கு புரெவி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் புயல் நாளை மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. திரிகோணமலை அருகே கரையை கடக்கும் இப்புயல், உடனே மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா நோக்கி நகர்ந்து கன்னியாகுமரி பகுதிக்கு 3-ந்தேதி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பின்பு மேற்கு- தென்மேற்கு அருகில் நகர்ந்து டிசம்பர் 4-ந்தேதி கன்னியாகுமரிக்கும் - பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் எனத் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது 75 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீச வாய்ப்புள்ளது. சில சமயம் 95 கிலோ மீட்டர் வரைக்கும் வீசலாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த புயலால் தென் தமிழகம், கேரளாவில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.