பிஎஸ்பிபி ஆசிரியர் தவறு செய்ததற்கான முக்கிய ஆதாரங்கள் சிக்கியது... சென்னை காவல் ஆணையர் தகவல்..!
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் , பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் , பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஆயுதப்படை தலைமை காவலர் சதீஷ் பாபு என்பவர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- பள்ளியில் நடந்த பாலியல் தொல்லை, ஒரு மனிதருக்கு எதிரான சம்பவம் அல்ல. இது ஒரு சமூகத்திற்கு எதிரான சம்பவம். குற்றவாளி கைது செய்யப்பட்டு போக்சோவில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும், இதுபோன்ற புகார்களில் பாதிக்கப்பட்டிருந்தால் முன்வந்து தகவல் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றார். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் இருவர் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று மற்றொரு பள்ளியின் மீதும் புகார் வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் முறையாக புகார் கொடுத்தால் விசாரணை தொடங்கப்படும். சமூக வலைதளங்கள் மூலமாக வரும் புகார்களையும் யார் வேண்டுமானாலும் எங்களுடைய கவனத்திற்கு கொண்டு வரலாம். நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.