காதல் கணவன் உயிரிழப்பு... 8 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை..!
சென்னை போரூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் 8 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் 8 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார்- இளந்தென்றல் தம்பதியினர். தற்போது இளந்தென்றல் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறைக்குள் சென்ற இளந்தென்றல் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மாமனார் ரவி கதவை தட்டியுள்ளார். அப்போதும் கதவு திறக்காததால் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இளந்தென்றல் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளந்தென்றல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் கல்லூரியில் படிக்கும் போது பிரவீன்குமார், இளந்தென்றலும் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த மாதம் 18-ம் தேதி நடந்த சாலை விபத்தில் கணவர் பிரவீன்குமார் இறந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து இளந்தென்றல் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. கணவர் இறந்த துக்கம் தாங்காமல் 8 மாத கர்ப்பிணி பெண் தூக்கப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.