கே.எஸ்.அழகிரிக்கு போலீஸ் சம்மன்
தடையை மீறி பேரணி நடத்திய வழக்கில், தமிழக காங்கிரஸ் தலைவருக்கு காவல் துறை சார்பில் சம்மன் வழங்கப்பட்டது.
தடையை மீறி பேரணி நடத்திய வழக்கில், தமிழக காங்கிரஸ் தலைவருக்கு காவல் துறை சார்பில் சம்மன் வழங்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி தனது ராஜினாமா கடிதத்தை சோனியா காந்தியிடம் வழங்கினார். அவரது முடிவை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. எனினும் ராகுல்காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது, தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை தேனாம்பேட்டை ஏ.ஜி.-டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து காமராஜர் அரங்கம் வரை மே 30ம்தேதி பேரணி நடந்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. எனவே, தடையை மீறி பேரணி நடத்தியதாக கே.எஸ்.அழகிரி உள்பட 500 பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மதிக்காதது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கே.எஸ்.அழகிரிக்கு காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.