இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதல்.. ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல்.. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 கைது.!
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் சென்றுகொண்டிருந்த மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இரண்டு ரயில்களும் ஒரே திசையில் சென்று கொண்டிருந்தன. அப்போது இவர்கள் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து சென்றதாக கூறப்படுகிறது.
சென்னை அத்திப்பட்டில் ரயில் மீது கற்கள் வீசி வன்முறையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூட்டு தல மோதல்
சென்னையில் மாநிலக் கல்லூரி - பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர் கதையாக இருந்து வருகிறது. காவல்துறை பல்வேறு எச்சரிக்கை விடுத்தும் மாணவர்கள் இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் சென்றுகொண்டிருந்த மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இரண்டு ரயில்களும் ஒரே திசையில் சென்று கொண்டிருந்தன. அப்போது இவர்கள் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து சென்றதாக கூறப்படுகிறது.
கற்களை வீசி தாக்குதல்
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. கத்தி மற்றும் கற்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும், ரயில் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகளிடையே பதற்றம் அடைந்து அலறியடித்து ஓடினர். இது குறித்து மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கல்லூரி மாணவர்கள் கைது
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு இருந்த மாணவர்களை சுற்றி வளைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பி.ஏ. 2-ம் ஆண்டு படிக்கும் மாணவரான இலவம்பேடு கிராமத்தை சேர்ந்த திலீப் (20), முதலாமாண்டு மாணவரரான கும்மிடிப்பூண்டியை சேர்ந்த விக்னேஷ் (19), 3-ம் ஆண்டு மாணவரான அஜித் (20) என்பது தெரியவந்தது.
இந்த மோதலில் 2 மாணவர்களுக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர்கள் யார் என்பது தெரியவில்லை. மோதலில் ஈடுபட்டது சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. 3 கல்லூரி மாணவர்களையும் போலீசார் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.