பப்ஜி மதனின் யூடியூப் சேனல்கள் முடக்கம்... போலீஸார் அதிரடி நடவடிக்கை..!
பல்வேறு புகார்களில் கைது செய்யபப்ட்டுள்ள ‘பப்ஜி’ மதனின் யூடியூப் சேனல்களை போலீஸார் முடக்கியுள்ளனர்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை தரவிறக்கம் செய்து யூடியூபில் ஸ்ட்ரீமிங் செய்த விவகாரத்தில், ஆபாசப்பேச்சு. பெண்கள், சிறுமிகளை தகாத வார்த்தைகளில் பேசுவது, பண மோசடி என ஏராளமான புகார்கள் ‘பப்ஜி’ மதன் மீது குவிந்தன. இந்தப் புகாரையடுத்து பப்ஜி மதன் தலைமறைவானார். புகாரின் பேரில் மதனின் யூடியூப் சேனல் பங்குதாரரரும் அவருடைய மனைவியுமான கிருத்திகாவை சேலத்தில் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மதனை தருமபுரியில் போலீஸார் பிடித்தன. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதனை, வரும் 3-ஆம்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து மதன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்தப் புகார் மட்டுமல்லாமல் வருமான வரி ஏய்ப்பு தொடர்பாகவும் வருமான வரித் துறைக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. கைதான மதனின் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் மட்டும் 4 கோடி ரூபாய் பணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. தாம்பரம், பெருங்களத்தூரில் தலா ரூ 45 லட்சம் மதிப்பில் 2 வீடுகள் இருப்பதாகவும், 2 ஆடம்பரக் கார்கள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைககளை மதன் வாங்கிக் குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுப்பற்றியும் விசாரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பப்ஜி மதனின் யூடியூப் சேனல்களை தடை செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்நிலையில் அவருடைய யூடியூப் சேனல்களை போலீஸார் இன்று முடக்கியுள்ளனர்.