பண மோசடியில் தேடப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு தலைவி கைது
பண மோசடி வழக்கில் தேடப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு தலைவியை போலீசார் கைது செய்தனர்.
பண மோசடி வழக்கில் தேடப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு தலைவியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் வாசன் நகரைச் சேர்ந்தவர் பூங்கொடி. மகளிர் சுய உதவிக் குழு நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி லட்சுமி. கடந்த சில மாதங்களுக்கு முன் லட்சுமி, தனது பெயரில் ரூ.1.5 லட்சம் வரை, சுய உதவிக் குழுக்களில் பணம் பெற்று, பூங்கொடியிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, சிறிய தொகைகளை பூங்கொடி, அவர்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், முழு தொகையை அவர், செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் நெருக்கடிக்கு ஆளான பாஸ்கர் மற்றும் லட்சுமி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அதில், லட்சுமி இறந்துவிட்டார். பாஸ்கர் பிழைத்து கொண்டார். இதை அறிந்ததும், பூங்கொடி தலைமறைவாகிவிட்டார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பூங்கொடியைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், யாருக்கும் தெரியாமல் பூங்கொடி, தனது வீட்டைக் காலி செய்வதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.