தற்கொலைக்கு முன் மாணவி எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியுள்ளது. அதில், எனக்கு வாழ பிடிக்கல. கொடூரமான சமூகத்தில் தப்பான எண்ணங்களை ஏன் இப்படி கடவுள் படைத்து இருக்கிறார். என்னை இந்த உலகத்துல கஷ்டப்படணும்னு படைச்சிருக்கார். என்னை பார்த்தாலே வெறுப்பு வருகிறது. என்னை சிலர் தவறாக பயன்படுத்தி விட்டனர். அது எனக்கு பிடிக்கலை. அந்த யோசனையே மனசுல ஓடிட்டு இருக்கு. எனக்கு ஆறுதல் சொல்லக் கூட யாரும் இல்லை. வெளியில சொன்னா என்னை தான் தப்பா பேசுவாங்க.

சென்னையில் 11ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை தாங்க முடியாமல் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அண்மைகாலமாக தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதுதொடர்பாக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வந்தாலும் இன்னும் ஓயவில்லை. இதனால், மாணவிகள் கடும் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் மாங்காடு சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு மேல் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க வேண்டும். இதுக்கு மேல முடியாது. மனசு ரொம்ப வலிக்குது. எனக்கு ஆறுதல் சொல்லக் கூட யாரும் இல்லை. என்னால நிம்மதியா தூங்க முடியல. கனவு வந்து டார்ச்சர் பண்ணுது. படிக்க முடியலை. இந்த சமூகத்துல பாதுகாப்பே இல்லை. என்னோட கனவு எல்லாம் போயிடுச்சு. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் தங்கள் மகன்களுக்கு சொல்லிக் கொடுங்கள். எனக்கு நியாயம் கிடைக்கும்னு நினைக்கிறேன். உறவினர்கள், ஆசிரியர்கள் யாரையும் நம்பாதீர்கள். அனைத்து மனிதர்களும் வேட்டையாடுபவர்கள் தான். அம்மா போய்ட்டு வர்றேன் இன்னொரு உலகத்துக்கு பாதுகாப்பான இடம் கல்லறையும், தாயின் கருவறையும்தான். பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பான இடம் இல்லை. எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என மாணவி எழுதிய 2 பக்க கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இது தவிர 3-வதாகவும் மாணவி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தின் கடைசியில் உடலை மட்டும் பார்த்து பழகுபவர்கள் ஆண்மைக்கு தகுதி இல்லாதவர்கள். மோசமான உலகத்தில் பிறந்து விட்டேன். மறுபடியும் வேறு உலகத்துக்கு செல்கிறேன். ‘‘ஸ்டாப் செக்சுவல் அராஸ் மெண்ட். ஜஸ்டிஸ் பார் மீ’’ என குறிப்பிட்டுள்ளார். தூக்கு கயிறு படம் ஒன்றையும் கடிதத்தில் அவர் வரைந்துள்ளார். இந்த கடிதத்தை கிழிந்த நிலையில்தான் போலீசார் கைப்பற்றி ஒட்ட வைத்துள்ளனர். இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த மாணவியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.