எத்தன தடவ மூடினாலும் திறந்துகொண்ட பெட்டி… கம்பி கட்டும் கதையாக மாறிய உள்ளாட்சி தேர்தல்..!
வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டி கட்டுக் கம்பி மூலம் முழுவதுமாக கட்டப்பட்டது.
வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டி கட்டுக் கம்பி மூலம் முழுவதுமாக கட்டப்பட்டது.
தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படாமல் வாக்குப்பதிவு நிறைவடைந்தாலும் ஒரு சில இடங்களில் வேட்பாளர்கள் மோதல், கள்ள ஓட்டு பிரச்சினைகள், கடைசி நேர பரபரப்பு இப்படியான சாராம்சங்களும் இந்த தேர்தலிலும் இடம்பிடித்தது.
செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியில் காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் 133-வது வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப் பெட்டிகளை மூடி சீல் வைக்கும் ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். அப்போது, எத்தனை முறை மூடினாலும் இரண்டு பெட்டிகள் மட்டும் மீண்டும், மீண்டும் திறந்துகொண்டன.
பலமுறை முயற்சி செய்தும் வேதாளம் போல் வாக்குப்பெட்டி அடம்பிடித்ததால் அதிகாரிகள், வாக்குச்சாவடி முகவர்கள், வேட்பாளர்கள் என அனைவரிடமும் பதற்றம் ஏற்பட்டது. இறுதியாக இரண்டு வாக்குப்பெட்டிகளையும் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் கட்டுக் கம்பியை கொண்டு முழுமையாக அதிகாரிகள் இறுக்கி கட்டி சீல்வைத்தனர். இவை அனைத்தும் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. பல மணி நேரப் போராட்டம் முடிவுக்கு வந்ததும் தான் அதிகாரிகள் முகத்தில் நிம்மதி பிறந்தது.