உடலில் எங்கு வைத்தாலும் லைட் எரியும் மின்சார குடும்பம் - தெலங்கானாவில் அதிசயம்
தெலங்கானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு உடலில் எங்கு வைத்தாலும் மின்சாரம் இன்றி லைட் எரியும் அதிசயம் நடக்கிறது. இதை பார்ப்பதற்காக அவர்கள் வீட்டிற்கு வியப்புடன் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
தெலங்கானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு உடலில் எங்கு வைத்தாலும் மின்சாரம் இன்றி லைட் எரியும் அதிசயம் நடக்கிறது. இதை பார்ப்பதற்காக அவர்கள் வீட்டிற்கு வியப்புடன் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
லைட் எரிய வேண்டும் என்றால் கட்டாயம் மின்சாரம் தேவை. ஆனால், மின்சாரம் இல்லாமலேயே தெலங்கானாவில் தந்தை, மகன், மகள் உடலில் எந்த இடத்தில் பல்பு வைத்தாலும் எரியும் அதிசயம் நடக்கிறது.
தெலங்கானா மாநிலம், ஆதிலாபாத் மாவட்டம், சிரசன்னா ராம் நகரை சேர்ந்தவர் ஷேக் சாந்த் பாஷா. இவர் கடந்த வாரம் தனது வீட்டில் இருந்த பல்ப் பழுதடைந்ததால் கடைக்கு சென்று புதிய பல்ப்பை வாங்கி வந்தார்.
தொடர்ந்து அந்த பல்பை வாங்கிய அவரது 7 வயது மகன் சமீர் மற்றும் மகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, மின்சாரம் இல்லாமலேயே அவர்கள் கையில் வைத்திருந்த பல்ப் எரிவதை பார்த்த ஷேக் சாந்த் பாஷா ஆச்சரியமடைந்தார்.
இதையடுத்து வேறு ஒரு பல்பை வாங்கி வந்து சோதித்தபோது அந்த பல்பும் அவர்கள் உடலில் பட்டவுடன் எரியத் தொடங்கியது. இதேபோன்று ஷேக்சாந்த் பாஷாவின் உடலில் வைத்தாலும் பல்ப் எரிந்தது. இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் பரவியதையடுத்து கிராமத்தில் உள்ள ஒவ்வொருவராக புதிய பல்புகளை வாங்கி வந்து அவர்கள் மீது வைத்து சோதனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ஒவ்வொருவரின் உடலிலும் மின்சாரம் என்பது இயற்கையாகவே இருக்கும். உடலில் ஈரப்பதம் இல்லாத நேரத்தில் அவை தெரியாது. ஈரப்பதத்துடன் யாராக இருந்தாலும் மின்சாரம் இல்லாமல் தொட்டால் பல்ப் எரியும் என தெரிவித்துள்ளனர்.