கல்லூரி, பல்கலைக்கழகங்கள் விடுமுறை நீட்டிப்பு..!
ஊரடங்கு காரணமாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறையை நீட்டித்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொடூர கொரோனா வைரஸ் நோய் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி 1251 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 32 பேர் பலியாகி இருக்கின்றனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது.
கடந்த 23ஆம் தேதி இரவு 8 மணி அளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் அதை வலியுறுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். அதன்படி அன்று நள்ளிரவில் இருந்து ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் இருக்கும் கல்வி நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருக்க அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் அன்றி வேறு எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில் கொரோனா பரவுதலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 14ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழகத்தில் இருக்கும் பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்திருந்தது. தற்போது மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்திருக்கும் நிலையில் தமிழக அரசு அறிவித்திருந்த விடுமுறை நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறையை ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டித்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் பேராசிரியர்கள், பணியாளர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.