சென்னை விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Laser Beam Shined On Chennai Flight: அண்மை காலமாக சென்னையில் விமானம் மீது லேசர் ஒளி அடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 27ம் தேதி துபாயில் இருந்து 326 பயணிகளுடன் சென்னை வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது அதன் மீது மர்மர்நபர்கள் சிலர் லேசர் ஒளி அடித்தனர். இதனால் அந்த விமானம் மிகவும் கஷ்டப்பட்டு தரையிறங்கியது. விமானத்தில் லேசர் ஒளி அடித்தவர்கள் குறித்து பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சென்னை விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி

இந்நிலையில், சென்னையில் மீண்டும் ஒரு விமானம் மீது லேசர் ஒளி அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இருந்து 304 பயணிகளுடன் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது அதன் மீது பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இதனால் விமானி விமானத்தை மீண்டும் பறக்கச் செய்து சிறிது நேரத்துக்கு பிறகே தரையிறக்கினார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை

சென்னையில் இந்த சம்பவம் தொடர்ந்து வரும் நிலையில், விமானத்தின் மீது லேசர் ஒளி அடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை வித்துள்ளார். இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.அருண், பிஎன்எஸ் சட்டப் பிரிவு 163 மற்றும் 14 (2) ஆகியவற்றின்படி பாதுகாப்பு கருதி மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசர் விளக்குகள் ஒளிரவும், அதிக ஒளி தரும் விளக்குகள் ஒளிரவும், சூடான காற்று நிரப்பப்பட்ட ராட்சத பலூன்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட பறக்கும் பொருள்கள் பறப்பதற்கும் ஜூலை 26 ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அசம்பாவிதங்கள் நிகழக்கூடும்

மீனம்பாக்கம் விமான நிலைய பகுதிகளிலும், அதன் அருகே உள்ள பிற பகுதிகளிலும் செல்லும் விமானங்கள் மீது லேசர் விளக்குகள் ஒளிரச் செய்தால், விமான வழித்தடங்களில் தொழில்நுட்ப கவனக் குறைவு ஏற்பட்டு அசம்பாவிதங்கள் நிகழக்கூடும். இதன் காரணமாகவே, பாதுகாப்பு கருதி சென்னை பெருநகர காவல் துறை லேசர் ஒளி விளக்குகள் உள்ளிட்ட பறக்கும் பொருள்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

அதிகாரிகள் விசாரணை

சில நாள்களாக மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் விமானத்தின் மீது சிலர் லேசர் விளக்கை ஒளிரச் செய்ததால், விமான நிலைய கட்டுப்பாட்டறை மூலம் உடனடியாக உஷார்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக விமானம் தரை இறக்கப்பட்டது. இது தொடர்பாக மீனம்பாக்கம் விமான நிலைய போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ள தடைகளை மீறி விமானங்களின் மீது லேசர் விளக்குகளை ஒளிரச் செய்வோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என கூறப்பட்டுள்ளது.