உடலுக்கு தடுப்பூசி போட்டாச்சு... ஊழலுக்கு தடுப்பூசி?... கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் கமல் ட்வீட்...!
இன்று பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்
இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தநிலையில், நேற்று முதல் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இரண்டாவது கட்டத்தில் 60-வயதைக் கடந்தவர்களுக்கும், இணைநோய்கள் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக பாரத பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நேற்று மட்டும் நாடு முழுவதும் 4.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக 25 லட்சம் பேர் கோவின் ஆப்பில் பதிவு செய்துள்ளனர்.
இன்று பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இதுகுறித்து கமல் ஹாசன் தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. “ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்” என சைடு கேப்பில் தேர்தல் பிரச்சாரத்தையும் செய்திருக்கிறார் உலக நாயகன்.
அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளரும், நடிகையுமான ஸ்ரீபிரியாவும் இன்று தன்னுடைய கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை எடுத்துக் கொண்டார். அவருடன் எம்.ஜி.ஆர் உடன் பல படங்களில் நடித்து புகழ் பெற்ற, பழம் பெரும் நடிகையான லதாவும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். காவேரி மருத்துவமனையில் இருவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.