சட்டவிரோத பணப்பரிமாற்றம்... தமிழகத்தில் 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனை...!
தமிழகம் முழுவதும் தயார் நிலையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு புகாரில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து விஷயங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவை ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
தேர்தல் நேரத்தில் பெரிய அளவிலான தொகைகள் வெளியே வரும் என்பதால், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக புகார் அளிக்க 24 மணி நேரமும் இயங்க கூடிய கட்டுப்பாட்டு அறையை வருமான வரித்துறை அமைத்துள்ளது. அதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் ஏதேனும் நடைபெற்றால் புகார் அளிக்கக்கோரி அவசர எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தயார் நிலையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு புகாரில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியில் கடந்த 4ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்ற சோதனையில் ரூ.1000 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாத இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், ரூ.1.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தலுக்காக சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடப்பதாக புகார்கள் எழுந்ததை அடுத்து சென்னை உட்பட 20 இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.