ஆணவக் கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன..? தமிழக அரசை வெளுத்து வாங்கிய உயர் நீதிமன்றம்..!
தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை தொடர்பான தமிழக அரசின் அறிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை தொடர்பான தமிழக அரசின் அறிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நடைபெறும் ஆணவக்கொலைகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, உயர் நீதிமன்றம் கடந்த 9-ம் தேதி தாமாக முன்வந்து வழக்குத் தொடுத்திருந்தது. வழக்கு விசாரணையின் போது, ஆணவக் கொலை தடுப்பு தொடர்பாக தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆணவ கொலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக நலத்துறையின் கீழ் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் 1300 காவல் நிலையங்கள் இருப்பதாகவும், அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவு அமைப்பது என்பது சாத்தியமில்லாதது எனவும் தெரிவித்தனர். தமிழக அரசு ஒரு துணடறிக்கை கூட வெளியிடவில்லை என்று அதிருப்தி தெரிவித்ததுடன், வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.