சென்னை மக்களே உஷார்.. தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்... இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, பெரம்பூர், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் சாலை தெரியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மழைநீர் வடிகால் பாதைகளை அடைத்திருப்பதால் தண்ணீர் வெளியேற முடியாத நிலையில் வீட்டிற்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, இன்னும் 3 மணிநேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கனமழை தொடர்பாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை நீடிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.