பயப்படாதீங்க நாங்க இருக்கோம்.. இனி மக்கள் எப்படி தற்காத்துக் கொள்வது? தமிழக டிஜிபியின் அறிவுரைகள்.!
பொதுமக்கள் அனைவரும் இடி-மின்னல், பெருமழை சமயங்களில் வீட்டுக்கு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குழந்தைகளையும் வெளியே வர விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பாதுகாப்புடன் கையாள வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில்:- கனமழை தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில், அடுத்த 3 தினங்களுக்கு இடியிடன் கூடிய கனமழை பெய்யும், புயல் கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
* பொதுமக்கள் அனைவரும் இடி-மின்னல், பெருமழை சமயங்களில் வீட்டுக்கு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குழந்தைகளையும் வெளியே வர விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
* அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற காரணத்துக்காக வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
* இடி-மின்னல் ஏற்படும் நேரங்களில் மரத்தடி மற்றும் உயர்ந்த கோபுரங்கள் கீழ் நிற்கக்கூடாது.
* ஆறு, ஓடைகளில் வெள்ளம் செல்லும்போது தரைப்பாலங்களின் மேல் கடக்கக் கூடாது.
* குடியிருப்புகளில் கீழ்தளத்தில் வசிக்கும் மக்கள் மின்னணு சாதனங்களை மேல்தளத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
* சாலை பள்ளங்கள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகளால் ஆபத்து ஏற்படும். எனவே அதிகாலை வேளையில், இருட்டான நேரத்தில் வெளியே செல்ல கூடாது.
* இருசக்கர வாகனத்தில் தலைகவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்லும் போது குடை பிடித்துக்கொண்டு செல்லக்கூடாது.இதனால், பெரிய விபத்து ஏற்படும்.
* நீர்நிலைகள் அருகே குழந்தைகள் செல்லாதவாறு பெற்றோர் பார்த்துக்கொள்ளவும். நீர்நிலைகைளை கடந்து செல்வதை தவிர்க்கவும்.
* இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை தாழ்வான பகுதிகளில் நிறுத்தி வைப்பதை தவிர்க்க வேண்டும்.
* டி.வி., பிரிட்ஜ் போன்ற மின்சார சாதன பொருட்களை உயரமான பகுதிகளில் வைக்க வேண்டும். இடி, மின்னலின் போது டி.வி. போன்றவற்றை அனைத்து வைக்க வேண்டும்.
தமிழ்நாடு காவல்துறை பொறுத்தவரையில் சிறந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பொதுமக்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் உள்ளனர். இதை தவிர்த்து 12,000 ஊர்க்காவல் படை, நூற்றுக்கணக்கான படகுகள் எல்லா பகுதிகளிலும் நிறுத்தி வைத்துள்ளோம். பேரிடர் மீட்பு படை மிக தயார் நிலையில் இருந்து வருகிறார்கள். உரிய பயிற்சி எடுத்தவர்கள் தயார் நிலையில் பல்வேறு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கடலோர காவல் படையில் உள்ள நீச்சல் வீரர்கள் 350 பேர் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். காவல்துறை கட்டுப்பாட்டு எண் 100, தீயணைப்பு உதவி எண் 101, பொது உதவி எண் 112, காவல்துறை தலைமை அலுவலக உதவி எண் 044-28447701 என அறிவுரை வழங்கி உள்ளார்.