உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..! கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை..!
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை பெய்ய இருக்கிறது.
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக தற்போது பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
நவம்பர் 30ம் தேதியில் இருந்து இருந்து சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக மிக கனமழை பெய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு திசையில் வீசும் காற்று காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும் இதனால் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.