தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய நிர்வாகிகள் கூறியிருப்பதாவது:

வெப்பச்சலனம் மற்றும் வடதமிழக பகுதியில் வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவாகி நிலை கொண்டிருந்த காரணத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.

இந்தநிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. இருப்பினும் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

நேற்று காலை 8.30 மணி வரை நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கல்லூரில் 8 சென்டிமீட்டர் மழையும், குறைந்தபட்சமாக மதுரை மேட்டுப்பட்டி மற்றும் திருச்சி மருங்காபுரியில் 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.