ஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு..! அமைச்சர் வேலுமணி அறிவிப்பு..!
மக்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் இலவச உணவு வழங்கும் சேவையை அரசு தொடங்கியுள்ளது. மே 31ம் தேதி வரை சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உச்சம் அடைந்து 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா பரவுதலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அமலில் இருக்கும் ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
அதை நிவர்த்தி செய்ய அரசு சார்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருக்கும் அம்மா உணவகங்கள் அனைத்தும் முழுநேரமும் செயல்பட்டு வருகின்றன. அம்மா உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகள் அரசு சார்பில் இலவசமாக பார்சல் மூலம் வழங்கப்பட்டு வந்தது. முதலில் பல்வேறு மாவட்டங்களில் ஆளும் அதிமுக தனது கட்சி நிதியில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கும் ஏற்பாட்டைச் செய்தது. இதையடுத்து அதிக அளவில் நன்கொடை வழங்கப்படவே சென்னையில் இருக்கும் 407 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்குவதாக மாநகராட்சி அறிவித்தது.
இதனிடையே 3ம் கட்ட ஊரடங்கு நிறைவடைந்த நிலையில் மீண்டும் அம்மா உணவகங்களில் கட்டணத்துடன் உணவு வழங்குவது தொடங்கியது. இதனால் ஏழை, எளிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இலவச உணவு வழங்கும் சேவையை தொடர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் இலவச உணவு வழங்கும் சேவையை அரசு தொடங்கியுள்ளது. அதன்படி மே 31ம் தேதி வரை சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.