மீனவர்கள் திடீர் காலவரையற்ற வேலை நிறுத்தம்..!
கடலில் பிடித்து கொண்டு வரப்படும் மீன்கள், இறால்களுக்கு உரிய விலை கிடைக்காததால் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் பிடித்து கொண்டு வரப்படும் மீன்கள், இறால்களுக்கு உரிய விலை கிடைக்காததால் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீன் இன வளர்ச்சிக்காக, ஆண்டு தோறும் மீன்பிடிதடை காலம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி, மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி, கடந்த 14ம் தேதி முடிந்தது. இதையொட்டி மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி ஆகிய பகுதிகளில் இறால், நண்டு மற்றும் பல்வேறு வகையான மீன்களை பிடித்த மீனவர்கள், நேற்று கரை திரும்பினர்.
60 நாட்கள் தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்றதால் மீன், இறால், நண்டு உள்பட பல்வேறு மீன்கள் அதிகளவில் வலையில் சிக்கின. இதனால், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அதிக வரத்து காரணமாக ஏற்றுமதியாளர்கள் மீன், இறால், நண்டு ஆகியவற்றை குறைந்த விலைக்கு கேட்டுள்ளனர். இதனால், மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஏற்றுமதியாளர்கள் ஒன்றாக இணைந்து சிண்டிகேட் அமைத்து கொள்முதல் செய்கிறார்கள். இதனால், எங்களுக்கு கடலில் கஷ்டப்பட்டு பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். மேலும், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால், சுமார் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.