வரதட்சணை கொடுமை.. திருமணமான 8 மாதத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண்.. அழுது துடித்த பெற்றோர்..!
சென்னையில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 8 மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 8 மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் அடுத்தடுத்து இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் இதேபோன்று சென்னையிலும் இதுபோன்ற கொடுமை அரங்கேறியுள்ளது. சென்னை பனையூர் பகுதியை சேர்ந்தவர் பிரமோத் (25) தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சிநேகா (19). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆன நிலையில் பிரமோத் தனது மனைவியிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், கோபித்துக்கொண்டு மனைவி சினேகா சேலையூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து, நேற்று இரவு பிரமோத் தொலைபேசி மூலம் சிநேகாவை தொடர்பு கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வரதட்சனை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சிநேகா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் பெற்றோர் சந்தேகமடைந்தனர். இதனையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிநேகா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு கதறி துடித்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிநேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வரதட்சணை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக சிநேகாவின் தந்தை சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, பிரமோத்தை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.