தமிழ்நாட்டில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா மகேஸ்வரியை வளர்ப்பு நாய் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை
தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நாய்கள் துரத்தி துரத்தி கடிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. தெரு நாய்கள் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கும் நாய்களும் சாலையில் செல்பவர்களை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து தமிழ்நாடு அரசு தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், பொது இடங்களில் குறிப்பாக நகரப் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு பாதிப்புகளும் அச்சுறுத்தலான சூழலும் நிலவுவதை கருத்தில்கொண்டு, இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வுக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
ஐ.ஏ.எஸ். அதிகாரியை கடித்த வளர்ப்பு நாய்
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் மருத்துவ சேவைகள் தேர்வு வாரியத்தின் தலைவராக உமா மகேஸ்வரி இருந்து வருகிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் ராயப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று காலை தனது கணவருடன் பாலாஜி நகர் முதல் தெருவில் உமா மகேஸ்வரி நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, ஒரு வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் எதிர்பாராத விதமாக உமா மகேஸ்வரியை 2 முறை கடித்தது.
காவல் நிலையத்தில் புகார்
உடனடியாக, மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர் வீடு திரும்பினார். நாயின் உரிமையாளரான சுரேஷ் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.


