பழைய கட்டடங்களில் தங்காதீர்.. உஷாரா இருங்கள் மக்களே.. பேரிடர் முகமை எச்சரிக்கை..!
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பழைய கட்டடங்களில் தங்கவோ, அருகில் செல்லவோ வேண்டாம் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பழைய கட்டடங்களில் தங்கவோ, அருகில் செல்லவோ வேண்டாம் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பருவமழை அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழைக்காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறிப்பில்;- தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ மற்றும் கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. பழைய கட்டிடங்களில் தங்குவதோ அருகில் செல்லவோ வேண்டாம் , அவ்வாறு பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இடி மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது, மரத்தின் அடியில் நிற்க கூடாது, திறந்தவெளியில் இருக்கக் கூடாது நீர்நிலைகளில் குளிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.