பஸ்டேவில் மாணவர்கள் கொத்து கொத்தாக விழுந்த சம்பவம்... டிரைவர், கண்டக்டருக்கு வித்தியாசமான தண்டனை கொடுத்த நிர்வாகம் !!
சென்னையில் நடந்த பஸ்டே கொண்டாட்டத்தின் சம்பவத்தின்போது பணியிலிருந்த டிரைவர், கண்டக்டருக்கு வினோத தண்டனை வழங்கப்பட்டுள்ளனர் போக்குவரத்துத்துறை அதிகாரிகள்.
சென்னை பட்டாபிராம் முதல் அண்ணா சதுக்கம் வரை செல்லும் பேருந்தில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து 20 மாணவர்கள் ஏறி வந்துள்ளனர். பேருந்து பாரதி சாலை அருகே வந்த போது எதிர் திசையில் கையில் மாலையுடன் வந்த மாணவர்கள் அரசுப் பேருந்திற்கு மாலை அணிவித்து பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதோடு பேருந்தின் மீது ஏறியும் மாணவர்கள் சிலர் கத்தி கோஷமிட்டனர். அரசுப் பேருந்திற்கு போடுவதற்காக கொண்டு வந்த மாலையை ஊர்வலமாக எடுத்து வந்து வாகனத்தில் போட்டதோடு, பட்டாசுகள் வெடித்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின் இந்த பஸ் டே கொண்டாட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 47 ஏ பேருந்து மீது 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறிக் கொண்டு ஆட்டம் போட்டபடி கூச்சலிடடவாறு வந்தனர். அப்போது பேருந்து முன் இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவர் திடீரென பிரேக் போட்டதால் அவர்கள் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநரும் பிரேக் அடித்தார். இதில் பேருந்து மேற்கூரையின் மீது இருந்த மாணவர்கள் கொத்துக் கொத்தாக மேலிருந்து கீழே விழுந்தனர். இதில் மாணவர்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்து விரட்டி விட்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தின் போது பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவர் லட்சுமணன், கண்டக்டர் மருதவமணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 பேரும் குரோம்பேட்டையில் உள்ள பயிற்சி பள்ளிக்கு சென்று 1 வாரம் பயிற்சி எடுக்க வேண்டும் என்றும் நூதன தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துதுறை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
எதற்க்காக இந்த வினோத தண்டனை என்றால், மாணவர்கள், பஸ்சை கடத்திச் செல்வது போல செயல்பட்ட போது இந்த சம்பவம் பற்றி டிரைவர், கண்டக்டர் இருவருமே ஏன் உரிய முறையில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கோ, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் தெரிவிக்கவில்லை? என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல, மாணவர்களின் இப்படி நடந்துகொண்டதை உடனடியாக தகவல் சொல்லியிருந்தால் இருந்தால் போலீசார் விரைந்து சென்று பஸ்டே கொண்டாட்டத்தைதடுத்திருப்பார்கள் என்றும், இதனை டிரைவர்-கண்டக்டர் இருவரும் செய்ய தவறி விட்டனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், டிரைவர் கண்டக்டரை மாணவர்கள் மிரட்டியே பஸ்சை ஓட்டச் சொன்னதாக சொல்கிறார்கள்.மாணவர்கள் பஸ்டே கொண்டாட்டத்தை தொடங்கியதும் சாலையோரமாக பஸ்சை நிறுத்துவதற்கே நான் முயற்சித்தேன் ஆனால், மாணவர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டியதால் என்னால் ஒன்றும் பண்ண முடியவில்லை என சோகமாக டிரைவர் தனது விளக்கத்தை கூறியுள்ளார்.