ஆம்புலன்சில் வெளியில் காத்திருப்பதற்கு பதிலாக மருத்துவர் கண்காணிப்பில் மருத்துமனை வளாகத்தில் இருப்பது போல ஸ்ட்ரெக்சரில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் எனவும், அதற்கான கூடுதல் ஸ்ட்ரெக்சர்களை ஏற்படுத்தவும் வலியுறுத்தினர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை நடைமுறை, ஆக்சிஜன் ரெம்டெசிவிர் தொடர்பான சூமோட்டோ வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் நவீன் மூர்த்தி என்பவர் ஆஜராகி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 9 பேர் மரணம் அடைந்துள்ளது குறித்து முறையிட்டார். 30 முதல் 45 வயதினர் அதிகம் மரணம் அடைந்துள்ளதாக அச்சம் தெரிவித்தார். மற்றொரு வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர் மூடப்பட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த உத்தரவிட கோரிக்கை வைத்தார்.

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் யாருக்கும் அனுமதி மறுக்கவில்லை என்றும், பிற மருத்துவமனைகளிலிருந்து அனுமதிக்காக வந்து காத்திருந்த நிலையில் சிலர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். தடுப்பூசி கொள்முதலுக்கு சர்வதேச டெண்டர் விட இருப்பதாக தெரிவித்தார். ரெம்டிசிவிர் விற்பனையை சென்னை கீழ்ப்பாக்கத்திலிருந்து நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு கூடுதல் கவுண்டர்களுடன் மாற்றியுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், ஆம்புலன்ஸ் உள்ளே வைத்து சிகிச்சை அளிப்பது மருத்துவமனைக்கு ஈடாகாது என்றும், ஆம்புலன்சில் வெளியில் காத்திருப்பதற்கு பதிலாக மருத்துவர் கண்காணிப்பில் மருத்துமனை வளாகத்தில் இருப்பது போல ஸ்ட்ரெக்சரில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் எனவும், அதற்கான கூடுதல் ஸ்ட்ரெக்சர்களை ஏற்படுத்தவும் வலியுறுத்தினர்.

போர்க்கால நிலை போல கருதி, கொரோனா பாதித்தவர்களை ஆம்புலன்ஸ்களில் நிறுத்தி வைக்காமல் மருத்துவமனை வராண்டாகளில் ஸ்ட்ரெக்சர் மூலம் சிகிச்சை அளிக்க யோசனை தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அடிப்படையில் உயர்வாக இருந்தாலும், சதவீதத்தில் குறைந்திருப்பது சற்றே ஆறுதல் தருகிறது என்றும், ஆனால் புதுச்சேரியில் எண்ணிக்கை அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். புதுச்சேரியில் 3800 படுக்கைகள் மட்டுமே உள்ளது போதுமானதல்ல என்றும் எச்சரித்துள்ளனர்.

மூடப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை தற்காலிக கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்தலாம் எனவும் அனுமதி அளித்துள்ளனர். பாலக்காட்டில் இருந்து வரக்கூடிய 40 டன் அக்சிஜன் நிறுத்தப்பட்டது குறித்து தெரிவித்த நீதிபதிகள், அக்சிஜன் ஒதுக்கீட்டின் அளவு 519 டன் என அதிகரிக்கப்பட்டு உள்ளதாலும், பிற மாநிலங்களிலிருந்து வருவதால், தற்போது எதும் கவலைப்பட தேவையில்லை என தெரிவித்தனர்.

தடுப்பூசி கொள்முதலுக்கு தமிழக அரசு டெண்டர் விடுத்தாலும், மத்திய அரசின் ஒதுக்கீட்டை வேறு மாநிலங்களுக்கு அனுப்ப கூடாது என்றும், டெண்டர் முடிவுக்கு வந்து சப்ளை துவங்கிய பிறகே ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்யலாம் என மத்திய அரசுக்கு அறிவுத்தினர். தற்போதைய நிலையில் தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை இருப்பதையும், அது உயிர் காக்கும் மருந்தல்ல என்பதையும் மக்கள் உணரத் துவங்கியுள்ளதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஓரளவு திருப்தி அடைவதாக தெரிவித்து வழக்கை மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சிறைகளில் கைதிகளை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து முறையீட்டை விசாரித்த நீதிபதிகள், மாநில சட்டப் பணிகல் ஆணைக்குழு டிஜிபியுடன் கலந்து பேசி சிறைகளில் உள்ளவர்களை சிகிச்சை வசதிகளை பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். கொரோனாவிற்கு பலியானவர்களின் உடலை ஒப்படைக்கவும் தகனம் செய்யவும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர். அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக, புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.