தமிழகத்தை மிரட்டும் கொரோனா வைரஸ்... 15 ஆயிரத்தைத் தாண்டிய ஒரு நாள் பாதிப்பு...!
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 15,659 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை புயல் வேகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தைக் கடந்தது. ஏப். 24 அன்று கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 14,842 ஆக இருந்தது. இந்நிலையில் இந்தப் பாதிப்பு 15,659 ஆக பதிவானது. இன்று 1,26,298 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் 15,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
சென்னையில் இரண்டாம் நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சென்னையில் நேற்று 4,086 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 4,206 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக இன்று ஒரே நாளில் மட்டும் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13,557ஆக உயர்ந்தது. தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையில் 1,05,180 பேர் உள்ளனர். கொரோனாவிலிருந்து இன்று 11,065 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 9,63,251 பேர் குணமடைந்துள்ளனர்.