ராயபுரத்தை ரவுண்டு கட்டும் கொரோனா..! பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடு உயர்வு..!
சென்னையில் இருக்கும் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அங்கு இன்றைய நிலவரப்படி 828 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் உச்சம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,882 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இருக்கும் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அங்கு இன்றைய நிலவரப்படி 828 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக திரு.வி.க.நகரில் 622 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 796 பேருக்கும், தேனாம்பேட்டையில் 522 பேருக்கும், வளசரவாக்கத்தில் 426 பேருக்கும், அண்ணா நகரில் 405 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதே போல தண்டையார்பேட்டையில் 362 பேர், அடையாறில் 267 பேர், அம்பத்தூரில் 234 பேர், கொரோனாவால் பாதிப்படைந்து தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் திருவொற்றியூரில் 118 பேருக்கும், மாதவரத்தில் 68 பேருக்கும், ஆலந்தூரில் 57 பேருக்கும், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூரில் தலா 54 பேருக்கும், மணலியில் 51 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி துரிதப்படுத்தியுள்ளது.