ஊரடங்கு நல்ல முடிவுகளை தந்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அதை  கடுமையாக்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக திட்டங்கள் வகுக்க வேண்டும்.

கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கொரோனா தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, படுக்கை எண்ணிக்கைகளை அதிகரிப்பது, ஆக்சிஜன் சப்ளை, ரெம்டெசிவிர் மருந்தை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பது குறித்த விபரங்கள் அடங்கிய அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது.

தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும், ஊரடங்கு அமலில் உள்ள போது வாகனங்களில் சாலைகளில் ஏராளமானோர் சுற்றித் திரிவதாகவும், குழந்தைகள் விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும், சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அதேபோல மாநிலம் முழுவதும் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும், சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஒரு மாதத்தில் தடுப்பூசி உற்பத்தியானது 30 சதவீதம் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீதிமன்ற வளாகங்களை கொரோனா சிகிச்சை மையங்களாகவோ, தடுப்பூசி மையங்களாகவோ பதன்படுத்திக் கொள்ளலாம் என அரசுக்கு யோசனை தெரிவித்தனர்.

மேலும், பரிசோதனைகளை குறைக்க கூடாது எனவும் கொரோனா மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், அப்போது தான் எதிர்காலத்தில் ஆக்சிஜன், மருந்து பெற உதவியாக இருக்கும் என சுட்டிக்காட்டினர். கொரோனாவுக்கு பலியானவர்களின் உடல்களை மருத்துவமனைகளிலேயே வைத்திருப்பது மற்ற நோயாளிகளுக்கு அச்சம் ஏற்படுத்தும் என்பதால் அவற்றை உரிய விதிகளை பின்பற்றி அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், உடல்களை கண்ணியமாக கையாள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

தடுப்பூசி சப்ளை போதுமான அளவில் இல்லாததால் தடுப்பூசி முகாம்கள் துவங்குவது ஸ்தம்பித்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், டொசிலூசூமா மருந்துக்கு இறக்குமதியை நம்பி இருப்பதால், மாற்றாக உள்ள உள்நாட்டு மருந்துகளான எக்சாமெதோசோன் உள்ளிட்ட மருந்துகளை பயன்படுத்தலாம் என்ற மத்திய அரசின் அறிக்கையை மேற்கோள்காட்டியுள்ளனர். இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளை பொறுத்தவரை, இ.எஸ்.ஐ உறுப்பினர்களின் நிதியில் அவை செயல்படுத்தப்படுவதால், அங்கு கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க உத்தரவிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இ.எஸ்.ஐ. கிளினிக்களை தடுப்பூசி மையங்களாக பயன்படுத்தலாம் என யோசனை தெரிவித்தனர்.

ஊரடங்கு நல்ல முடிவுகளை தந்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அதை கடுமையாக்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக திட்டங்கள் வகுக்க வேண்டும் எனவும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்குகளின் விசாரணையை மே 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.