மேலும் 7 பேர்..! தமிழகத்தில் 74 ஆக உயர்ந்த கொரோனா பாதிப்பு..!
இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை தமிழக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருந்த நிலையில் இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை தமிழக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்திருக்கிறது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், தமிழகத்தில் தற்போது புதியதாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த 43 வயது நபர் ஒருவருக்கும் 28 வயது இளைஞருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதே போல டெல்லியில் இருந்து விழுப்புரம் வந்த மூன்று நபர்களுக்கும் மதுரைக்கு வந்த இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் தனிமையில் வைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது உடல் நிலை சீராக இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
இதுவரையில் தமிழகத்தில் கொரோனாவால் மதுரையில் முதியவர் ஒருவர் பலியாகி இருக்கிறார். அவரது குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமை சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.