சென்னையில் காலையிலேயே வந்த அதிர்ச்சி செய்தி... இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ..!
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கட்டுக்கடங்காத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எணணிக்கை ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. அதேவேளையில் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று தமிழகத்தில் முதன்முறையாக 1500-ஐ தாண்டியது. நேற்று 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,239 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 23,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், நேற்று மட்டும் சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்த 8 பேர் சிகிச்சைப் பலனின்றி கொரோனாவால் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஓமாந்தூரார் மருத்துவனையில் நேற்று இரவு முதல் தற்போது வரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 நெருங்கி வருகிறது.