செங்கல்பட்டு பொத்தேரி ரயில் நிலையத்தில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு பொத்தேரி ரயில் நிலையத்தில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த புது பெருங்களத்துரை சேர்ந்தவர் ரகுராமன். இவர் காட்டாங்குளத்தூர் தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் நூலகராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் கிருத்திகா.

இவர் அதே கல்வி நிறுவனத்தில் B.optomic மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி முடிந்து தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் செல்வதை வழக்கமாக கொண்டிருந்த கிருத்திகா, சம்பவத்தன்று தந்தையான ரகுராமனுக்கு அலுவல்கள் இருந்ததால், மின்சார ரயிலில் வீட்டுக்கு செல்வதற்காக கிருத்திகா செங்கல்பட்டு பொத்தேரி ரயில் நிலையம் நோக்கி நடந்து சென்றார்.

செல்போன் பேசியபடியே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் பல்லவன் விரைவு ரயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருத்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.