சென்னையில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி... தாத்தா-பாட்டி கண்முன்னே உடல்நசுங்கி உயிரிழந்த 4 வயது சிறுவன்..!
சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று காலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி மோதியதில் 4 வயது குழந்தை உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று காலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி மோதியதில் 4 வயது குழந்தை உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே இன்று காலை வழக்கம் போல் வாகனப்போக்குவரத்து இருந்தது. பட்டினப்பாக்கம் சிக்னல் அருகில் குடிநீர் வழங்கல் வாரியம் தண்ணீர் சேகரிப்பு நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னைக்கு லாரிகள் மூலம் தண்ணீர் சேகரித்து அனுப்பப்படும். இதற்காக இந்த சாலையில் தண்ணீர் லாரிகள் அதிகம் செல்லும். இப்பகுதியில் அடையாறு, மயிலாப்பூர், நந்தனம் நோக்கி வாகனங்கள் செல்ல ஒரே சாலை என்பதால் அதிக வாகன நெரிசல் இருக்கும்.
இந்நிலையில், இன்று காலை எம்ஆர்சி சிக்னலில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. இதில், முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அந்த வாகனத்தில் தரமணியைச் சேர்ந்த தம்பதி தனது 4 வயது பேரனுடன் தரமணி நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தனர். லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களுடன் பயணித்த 4 வயது பேரன் பிரணிஷ் லாரியின் சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், உயிரிழந்த சிறுவன் உடலைப்பார்த்து பாட்டியும், தாத்தாவும் கதறி அழுதனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்தபோலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.