பொதுமக்கள் அனைவரும் கொரோனா பயத்தில் ஊரடங்கு இருக்கும்போது, வெளியில் வழக்கறிஞர்கள் தேவையில்லாமல் சுற்றுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை சேத்துபட்டு சிக்னலில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆனந்தன், தலைமை காவலரான ரஜித்குமார் உள்ளிட்டோர் காவலர்கள் கடந்த வாரம் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை வழி மறித்து விசாரணை செய்தனர். காரை ஓடி வந்த சட்டப்படிப்பு படிக்கும் மாணவி பிரீத்தி ராஜனிடமிருந்து ஓட்டுநர் உரிமத்தை பெற்று அபராத ரசீதை கொடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த பெண் நடந்த விஷயத்தை வழக்கறிஞரான தன் தாயிடம் கூறி அங்கு வரவழைத்துள்ளார்.

அங்கு வந்த அவரது தாயார் தனுஜா ராஜன், முகக்கவகவசம் இல்லாமல் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ரசீதை வீசி எறிந்து விட்டு இருவரும் கிளம்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து தலைமை காவலர் ரஜித் குமார் அளித்த புகாரில் சேத்துப்பட்டு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குபதிவு செய்தனர்.
கொலை மிரட்டல் விடுவது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுப்பது, பேரிடர் மேலாண்மை சட்டப் பிரிவையும் சேர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி தனுஜாவும் அவருடைய மகளும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இருவரும் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஊரடங்கு விதிகளை மீறும் வழக்கறிஞர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். லாக்டவுனில் மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருவதாகவும், பொதுமக்கள் அனைவரும் கொரோனா பயத்தில் ஊரடங்கு இருக்கும்போது, வெளியில் வழக்கறிஞர்கள் தேவையில்லாமல் சுற்றுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.

வழக்கறிஞர் தனுஜாவிற்கு முன்ஜாமீன் அளித்தால் அரசு மருத்துவமனைக்கு நிவாரண நிதியாக லட்சம் ரூபாய் தரமுடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலை பிரதிவாதியாக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி, ஊரடங்கில் வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை மறுதினம் ஒத்திவைத்துள்ளனர்.
